சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.
ஆசிய நாடான சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி ஹலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் வரும் 13ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய ஜனாதிபதிக்கான தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (வயது- 66) சீன வம்சாவளிகளான இங் கொக் செங் (வயது-76), டான் கின் லியான் (வயது- 75) ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. இன்று தேர்தல் நடந்தது. இதில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீத வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து சிங்கப்பூர் ஜனாதிபதியாகத் தேர்வானார்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 2001ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப்பூர் நாணய சபையின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவருக்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி இது பொதுமக்களே நேரடியாக ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்ட பின் நடக்கும் மூன்றாவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.