2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது தினசரி மின்வெட்டு காலத்தைக் குறைக்க முடியாது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
திருத்தங்களைச் செய்ய இயலாமை குறித்து இலங்கை மின்சார சபையின் தலைவர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் உற்பத்திக்கு அதிக செலவு செய்யப்படுவதாகவும், இதற்கு போதிய நிதி பற்றாக்குறை இருப்பதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைக் கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிப்பதைத் தவிர்க்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னர் இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்தது.
உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உறுதிப்படுத்தல் கிடைத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் தினசரி மின்வெட்டுகளை விதிக்க வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2,200 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
தற்போது, இலங்கை மின்சார சபை தினமும் இரண்டு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டுகளை விதிக்கின்றது.