எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஆணைக்குழுவிற்கு நிதி கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் தேதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.
இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களும் தத்தமது பணியிடங்களில் தங்களின் தபால் வாக்குகளை மூன்று நாள்களில் குறிக்கலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அந்த மூன்று நாட்களிலும் யாரேனும் தபால் வாக்கு போட முடியாமல் போனால், இம்மாதம் 28ம் திகதி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் தபால் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
சுமார் 36,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் தங்களுக்கு சட்டத் தடைகள் எதுவும் இல்லை என்று சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே அறிவிக்கப்பட்டபடி மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதை உறுதிசெய்ய ஆணைக்குழுவும் மற்ற தேர்தல் செயலக அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர் என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.