சண்டிலிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு சேதப்படுத்திய வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு குழுவினர் இன்றைய தினம் சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
23,24 வயதுடைய மானிப்பாயைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரே கைது செய்யப்பட்டனர்.
வன்முறைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு வாள்கள் மற்றும் இரும்புக் கம்பி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏற்கனவே இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பழிவாங்கும் நோக்கிலேயே இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.