யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறும் அருகில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரியும் இன்று மக்கள் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் நுழையமுடியாதவாறு பொலிஸார் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட சிலர் பொலிஸாருடன் வாதம் புரிந்து வருகின்றனர்.

அதனால் போராட்ட களத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புஙபலப்படுத்தப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்று விகாரைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தொடரச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இன்று முதல் எதிர்வரும் வெசாக் தினமான வெள்ளிக்கிழமை வரையில் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக குறித்த பகுதியில் பந்தல் அமைக்க முற்பட்ட நிலையில், பொலிஸார் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.
தனியார் காணியொன்றில் பந்தல் அமைக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விகாரைக்கான கட்டுமானப்பணிகள் தற்போது முழுமைப்படுத்தப்பட்டு கலசம் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.