மாவீரர் நாள் நிகழ்வுகளை தடையின்றி நடத்துவதற்கு தேவைப்பட்டால் அரசுடன் பேச்சு நடத்துவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்ததாவது;
தமிழ் தேசியக் கட்சிகளின் இன்றைய கூட்டத்தில் இரு முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்ந்தோம்.
தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் தமிழ் தேசியத்தின்பால் உள்ள கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசுவதென தீர்மானித்திருந்தோம். மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பிலும் ஆராய்ந்தோம்.
அந்தந்த துயிலுமில்ல பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதென தீனமானித்தோம்.
கோரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக எவ்வாறு நினைவேந்தலை நடத்த வேண்டும் என்பதனை அடுத்த வாரமளவில் அறிக்கை மூலம் வெளியிடுவோம்.
மாவீரர் நாள் நினைவேந்தல், உயிரிழந்த உறவுகளை மக்கள் அஞ்சலிப்பது என்பதில் திட்டவட்டமாக உள்ளோம்.
மாவீரர் நாள் நிகழ்வுகளை தடையின்றி நடத்துவதற்கு தேவைப்பட்டால் அரசுடன் பேசுவோம் – என்றார்.
