யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் சுன்னாகம் கொலை முயற்சியுடன் சரணடைந்த மூவருக்கும் தொடர்புள்ளமை பொலிஸ் உயர்மட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீற்றர் வட்டி கும்பலுக்கு சுன்னாகம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் நெருங்கிய தொடர்புள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த காணொளி தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.
தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.
மீற்றர் வட்டிக்கு வழங்கிவிட்டு பணத்தை மீள வசூலிப்பதற்காக வர்த்தகர்களை அடித்துத் துன்புறுத்தும் இருபதற்கும் மேற்பட்ட காணொளிகள் பொலிஸ் உயர்மட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சுன்னாகத்தில் நேற்றுமுன்தினம் காரில் பயணித்தவரை வாகனத்தினால் மோதி கொலை செய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸில் சரணடைந்த ஜெகன் உள்ளிட்ட மூவருக்கும் மீற்றர் வட்டிக்கு பெற்றவர்களை அடித்துத் துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.
மருதனார்மடம் சந்தைக்கு அண்மையாக உள்ள தோட்டக்காணிக்கு அழைத்தே பலரை அடித்துத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் உள்ளனர் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கும்பலுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு வழங்கச் சென்றாலும் அவர் திருப்பி அனுப்புவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்துக்குப் புறம்பாக செயற்படுவோர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பொலிஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பொலிஸ் உயர்மட்டத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.