Tuesday, December 5, 2023
Homeஅரசியல்90 ஆயிரம் பேர் வெளிநாட்டு வேலைக்காக நாட்டிலிருந்து வெளியேறினர்

90 ஆயிரம் பேர் வெளிநாட்டு வேலைக்காக நாட்டிலிருந்து வெளியேறினர்

அண்மைக் காலமாக 90 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 26 ஆயிரம் திறமையற்ற பணியாளர்களும் 60 ஆயிரத்திற்கும் அதிகமான திறமையான பணியாளர்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

தனி நபர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது, ருமேனியாவில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ருமேனியாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இலங்கை ருமேனியா நாடாளுமன்ற நட்புறவு சங்கம் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, இச்சந்திப்பின் போது தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தின் சிக்கல்களை தடுக்கும் வகையில் புதிய ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதன்படி, ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தை உருவாக்குவதற்கு பொதுமக்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுவது மே 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

தற்போது பரவலாகவும் சிக்கலானதாகவும் உள்ள நாட்டின் தொழில்துறை சட்டம் ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க இது ஒரு அத்தியாவசிய நடவடிக்கை என்றும் தொழிலாளர் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு, புதிய ஒருங்கிணைந்த சட்டம், முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையே உள்ள சச்சரவுகளுக்கு தீர்வு காண உதவும்.

இந்த புதிய சட்டங்கள் குறிப்பாக இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு தொழில் நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கும் நடத்துவதற்கும் வசதியாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஊழியர்களின் சேமலாப நிதியில் (EPF) பதிவு செய்யப்படாத வணிகங்கள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

ஊழியர் சேமலாப நிதியத்தில் 80 ஆயிரம் நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதன்படி, நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை தொழிலாளர் அமைச்சுக்கு அனுப்புமாறு அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும், அவற்றில் ஊழியர்களுக்கு சேமலாப நிதி செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்த திட்டத்தை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழில் திணைக்களம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களான ஜகத் புஸ்பகுமார, டி.பி.ஹேரத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், அகில எல்லாவல, உதயன கிரிடிகொட, மதுர விதானகே, யதாமினி குணவர்தன, வேலு குமார், சுதர்சன தெனிபிட்டிய ஆகியோரும் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular